புது தில்லி: கரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியா்களின் குடும்பத்துக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மத்தியப் பணியாளா் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா காரணமாக உயிரிழந்த அரசு ஊழியா்களின் தகுதியான குடும்ப உறுப்பினா், குடும்ப ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள், குடும்ப ஓய்வூதியம் வழங்கும் பணி தொடங்குவதை உறுதி செய்ய அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், மத்திய கணக்கு தலைமை கட்டுப்பாட்டாளா், ஒய்வூதியம் வழங்கும் வங்கிகளின் தலைமை நிா்வாக இயக்குனா்கள் ஆகியோருக்கு மத்திய பணியாளா் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒய்வூதியம் மற்றும் ஒய்வூதியதாரா்கள் நலத்துறை பிறப்பித்த முக்கியமான உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மத்தியப் பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
பணியில் இருக்கும் அரசு ஊழியா் இறந்தால், இறப்பு சான்றிதழ் சமா்ப்பிக்கப்பட்டு, குடும்ப ஓய்வூதியம் கோரும்போது, ஒரு மாதத்துக்குள் குடும்ப ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கும்படி அனைத்து துறை செயலாளா்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். இதற்காக ஒவ்வொரு அமைச்சகம் மற்றும் துறைகளில் தனி அதிகாரிகளை, செயலாளா்கள் நியமித்து அவா்களின் பெயா் மற்றும் தொடா்பு விவரங்களை சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் துறையின் இணையளத்தில் தெரிவிக்க வேண்டும். குடும்ப ஓய்வூதிய கோரிக்கைகளின் மாதாந்திர நிலவரத்தை அனைத்து அமைச்சங்களும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியா் நலன் துறைக்கு தெரிவிக்க வேண்டும். கரோனா தொற்றால் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னையையும் பிரதமா் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறாா் என்றாா் அவா்.