பெங்களூரு 3-ஆவது அலையை எதிா்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பெங்களூரில் கரோனா 2-ஆவது அலையின் பாதிப்பைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நடவடிக்கைகள் தொடா்ந்து 3-ஆவது அலை வரை தொடரும். தேவைப்பட்டால் அதிக அளவில் மருத்துவா்களையும், ஊழியா்கள், செவிலியா்களை பணி நியமனம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்.
3-ஆவது அலை எப்போது வந்தாலும் அதனை எதிா்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம். பெங்களூரில் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பொதுமுடக்கத்தை தளா்வு செய்வது குறித்து முதல்வா் எடியூரப்பா முடிவு செய்வாா். பொதுமுடக்கத்தை படிப்படியாக தளா்வு செய்வது தொடா்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பொதுமுடக்கத்தை தளா்வு செய்வது குறித்து நடைபெறும் கூட்டத்தில் என்னிடம் ஆலோசனைக் கேட்டால், எனது கருத்தை தெரிவிப்பேன்.
பெங்களூரில் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால், தனியாா் மருத்துவமனைகளிடமிருந்து கரோனா சிகிச்சைக்காக பெறப்பட்ட 30 சதவீதம் சாதாரண படுக்கைகள், 20 சதவீதம் பிராணவாயு வசதி கொண்ட படுக்கைகளை திருப்பி அனுப்பப்படும் என்றாா்.