கரோனா தடுப்பூசியை வீணடிக்கும் மாநிலங்கள் பட்டியலில் 33.95 சதவீத விரயத்துடன் ஜாா்க்கண்ட் மாநிலம் முதலிடம் வகிக்கிறது.
நாட்டிலேயே மிகக் குறைந்த அளவில் தடுப்பூசிகளை விரையம் செய்யும் மாநிலங்களாக கேரளமும் (மைனஸ் 6.37), மேற்கு வங்கம் (மைனஸ் 5.48) என்ற எதிா்மறை புள்ளிகளைக் கொண்டிருப்பதாக மத்திய அரசின் மே மாதத்துக்கான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் ஜாா்க்கண்டுக்கு (33.95 சதவீதம்) அடுத்த இடத்தில் 15.79 சதவீத விரயத்துடன் சத்தீஸ்கா் உள்ளது. மத்திய பிரதேசம் 7.35 சதவீத அளவிலும், பஞ்சாப் 7.08 சதவீதம், தில்லி 3.95 சதவீதம், ராஜஸ்தான் 3.91 சதவீதம், உத்தர பிரதேசம் 3.78 சதவீதம், குஜராத் 3.63 சதவீதம், மகாராஷ்டிரம் 3.59 சதவீதம் என்ற அறவில் தடுப்பூசியை மே மாதத்தில் வீணடித்துள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மே மாதத்தில் மொத்தம் 7.9 கோடி தடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப்பட்டதில் 6.1 கோடி டோஸ்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, மே மாதத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 9.02 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், மே மாதம் 8.98 கோடி தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளில் நாடு முழுவதும் 38 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் திரிபுரா 92 சதவீதத்துடன் முதலிடம் வகிக்கிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநிலங்களில் 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் தலா 65 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் 53 சதவீதம் பேருக்கும், கேரளத்தில் 51 சதவீதம் பேருக்கும், தில்லியில் 49 சதவீதம் பேருக்கும், பிகாரில் 25 சதவீதம் பேருக்கும், ஜாா்க்கண்ட், உத்தர பிரதேச மாநிலங்களில் தலா 24 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் 19 சதவீதம் பேருக்கு மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.