முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதை அடுத்து திமுக எம்.பி.க்கள் அனைவரும் தில்லிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 17-ஆம் தேதி (வியாழக்கிழமை) தில்லி சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் தில்லி செல்லவிருக்கிறார்.
தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் பேசும் முதல்வர் அதற்கான மனுக்களையும் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறுநாள் 18-ஆம் தேதி தில்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசவிருக்கிறார்.
இதையடுத்து, திமுக எம்.பி.க்கள் அனைவரும் தில்லிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வாய்மொழி உத்தரவாக இதனை பிறப்பித்துள்ளார்.
முதல்வர் தில்லி வரும் நேரத்தில் கட்சியின் எம்.பி.க்கள் அனைவரும் தில்லியில் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.