தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானவர்களின் இறப்புகளை விசாரணை செய்ய மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுவிற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை பரவலால் தில்லி கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. தொற்று பரவல் அதிகரித்துவந்த வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது.
இந்நிலையில், தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த மே மாத தொடக்கத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்பட 12 கரோனா நோயாளிகள் பலியாகினர். இது நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இந்த இறப்புகள் குறித்து விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் மாநில அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டது. எனினும் மாநில அரசின் இந்த விசாரணைக் குழுவிற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தில்லி அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, “மாநில அரசின் பணிகளில் மத்திய அரசு தலையிடுகிறது. மத்திய அரசு ஏன் மாநில அரசுகளை செயல்பட அனுமதிப்பதில்லை? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.