பிரதமர் தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொண்டு, வல்லுநர்களின் உதவிகளைக் கேட்டுப் பெற்றால் மட்டுமே நம் நாட்டை மீட்டுருவாக்கும் பணியைத் தொடங்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உலகத்தின் வறுமையை அதிகரிப்பதில் இந்தியாதான் பெரும் பங்கு வகித்திருப்பதாக உலக வங்கி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலை மேற்கோள்காட்டி சுட்டுரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் ராகுல்.
உலகில் கரோனா காலத்தில் உலகளாவிய வறுமைக் கோட்டுக்குக் கீழே சென்றவர்களின் எண்ணிக்கை 13.1 கோடி, இவர்களில் இந்தியாவில் மட்டுமே 7.5 கோடி பேர். மொத்தத்தில் இது 57.3 சதவிகிதம்.
இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ள ராகுல், "பெருந்தொற்றை இந்திய அரசு தவறாகக் கையாண்டதன் விளைவுதான் இது.
ஆனால், இப்போது நாம் எதிர்காலத்தைப் பற்றிதான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரதமர் தனது தவறுகளை ஒப்புக்கொண்டு வல்லுநர்களின் உதவியைப் பெற்றால் மட்டுமே நம் நாட்டை மீண்டும் கட்டமைக்க முடியும்.
எல்லாவற்றையும் மறுத்துக் கொண்டேயிருப்பதால் எவ்விதத் தீர்வும் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.