வடகிழக்கு மாநிலங்களில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மணிப்பூரின் மொய்ரங் பகுதியில் இன்று அதிகாலை 1.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.0ஆகப் பதிவானது. இதேபோல் அசாம் மாநிலத்தின் தேஜ்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.04 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.
தேஜ்பூரிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியிலும் இன்று அதிகாலை 4.20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 2.6 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அசாமின் சோனித்பூர் நகரில் இன்று மதியம் 12.42 மணியளவில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 2.8 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.