கரோனா 3-வது அலைக்கும் தடுப்பூசியே தீர்வு என்று நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவது மக்களின் கைகளில் தான் உள்ளது என்றும், அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி என்ற மத்திய அரசின் திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கையின் படிநாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் ஒரே நாளில் அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் இதுவே அதிக எண்ணிக்கையுடையதாகும்.
இது தொடர்பாக பேசிய அவர், ஒரு நாளில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தியதன் மூலம் கரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவின் திறன் தெரியவந்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைத்ததன் மூலமாக இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டு கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்தால், மூன்றாவது அலையைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடித்தால் இந்த இக்கட்டான சூழலைக் கடக்க இயலும்.
கரோனா மூன்றாவது அலைக்கும் தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு. தடுப்பூசியால் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டுள்ளது. அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொள்ள இதுவே உகந்த நேரம் என்று கூறினார்.