உலகளவில் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறி சாதனை படைந்துள்ளதாக பிரதமர் மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 32.36 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டதையடுத்து, அமெரிக்காவை(32.33 கோடி) பின்னுக்கு தள்ளி உலகளவில் முதலிடம் பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளை டிவிட்டரில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
மேலும், நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது. தடுப்பூசி போடும் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுகள். நாட்டில் உள்ள அனைவருக்கும், இலவசமாக தடுப்பூசி போடும் பணி தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி பல கட்டங்களாக கரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.