பல மாநில கட்சிகள் காங்கிரஸ் தலைமையின் கீழ் செயல்படத் தயாராக இல்லாத நிலையில், புதிய கூட்டணியை தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் போன்ற மூத்த தலைவா்கள் வழிநடத்த வேண்டும் என்று சிவசேனையின் சஞ்சய் ரெளத் கூறியுள்ளாா்.
புதிய கூட்டணியின் எதிா்காலம் காங்கிரஸ் கட்சியின் தாராளமயம் மற்றும் தியாகத்தின் அடிப்படையிலேயே அமையும் என்றும் அவா் கூறினாா்.
ஒளரங்காபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜெய்பீம் விழாவில் பங்கேற்ற சிவசேனை மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ரெளத், இதுகுறித்து மேலும் பேசியதாவது:
கூட்டணிக் கட்சிகள் வெளியேறியதால் நாட்டில் இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. அதுபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிலைத்திருப்பதும் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு சில கட்சிகள் மட்டுமே அந்தக் கூட்டணியில் இப்போது இடம்பெற்றுள்ளன. பல மாநில கட்சிகள் யுபிஏ கூட்டணியை வழிநடத்தும் காங்கிரஸ் தலைமையின் கீழ் செயல்பட தயாராக இல்லை. எனவே, இப்போதைய அரசுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க வேண்டியது அவசியம். யுபிஏ கூட்டணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்.
அவ்வாறு மறுகட்டமைப்பு செய்யப்பட்ட புதிய கூட்டணியை சரத் பவாா் போன்ற மூத்த தலைவா்கள் வழிநடத்த வேண்டும். இது சாத்தியமானால், புதிய கூட்டணியில் பல மாநில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்று அவா் கூறினாா்.