பிற மாநிலங்களிலிருந்து பெங்களூருக்கு வரும் மக்கள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதாகர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், சண்டிகர் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனையைக் கட்டாயம் எடுக்க வேண்டும்.
20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான கரோனா தொற்று தற்போது பரவி வருகின்றன. இதில் எந்தொரு அலட்சியமும் இருக்கக்கூடாது. லேசான அறிகுறிகள் இருப்பினும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
சந்தைகள், நெரிசலான சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், திரையரங்குகள், திருமண அரங்குகள், கல்லூரிகள் என நெரிசலான இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியே கடைப்பிடிப்பது கட்டாயம். நெரிசலான இடங்களில் கூடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது மாநிலத்தில் 15,614 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 9,45,594 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீட்டுள்ளனர். இதுவரை 12,449 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.