அஸ்ஸாம் மாநிலத்தின் வரலாறு, பண்பாடு மீது குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட காணொலியில் கூறியது:
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காங்கிரஸ் கூட்டணி 5 வாக்குறுதிகளை அளித்துள்ளது. அதில் மாநிலத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது என்ற வாக்குறுதியும் அடங்கும். அஸ்ஸாம் மொழி, வரலாறு மற்றும் பண்பாடு மீது சிஏஏ மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே அந்தச் சட்டத்தை காங்கிரஸ் கூட்டணி அமல்படுத்தாது.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 254-ஏவை ரத்து செய்ய திட்டமிட்டு மலைவாழ் பழங்குடியின மக்கள் மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது. ஆனால் அந்தச் சட்டப்பிரிவை காங்கிரஸ் கூட்டணி அமல்படுத்தும்.
மாநிலத்தில் 5 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு ரூ.365 குறைந்தபட்ச ஊதியம் அளிக்கப்படும் என்றாா்.
அஸ்ஸாமில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அவா் சுட்டுரையில் பேசிய காணொலியை வெளியிட்டாா்.