பாஜக அரசால் சிறுபான்மையினரும் பலனடைவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.
அசாமில் 123 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்டத் தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் அசாம் மாநிலத்தின் கம்ருப் மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, ''காங்கிரஸ் கட்சி வேறுபாடுகளை முன்வைத்து மக்கள் மத்தியில் பிரச்சனைகளைத் தூண்டிவிடுகிறது. அசாம் - வங்கதேச மக்கள், ஹிந்து - இஸ்லாமியர்கள், மலைவாழ் மக்கள் என பல்வேறு வேறுபாடுகளைத் தூண்டி மக்களிடையே மோதலை ஏற்படுத்துகிறது.
நாங்கள் அனைவரது வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பை வழங்குகிறோம். அதில் இஸ்லாமியர்களும் பலனடைவர். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் சிறுபான்மையினரும் பலன் அடைவர். சிறுபான்மையினர், மலைவாழ் மக்கள் என அனைவருக்கும் அசாம் அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார்.