பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் செவ்வாய்க்கிழமை குறைக்கப்பட்டது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை அடுத்து, ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை முறையே 22 காசுகள் மற்றும் 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த விலைக் குறைப்பை அடுத்து, சென்னையில் பெட்ரோல் விலை ரூ.92.77-இல் இருந்து ரூ.92.58-ஆகவும், டீசல் விலை ரூ.86.10-இருந்து ரூ.85.88-ஆகவும் குறைந்துள்ளது.
மும்பையில் பெட்ரோல் விலை ரூ.97.19-லிருந்து ரூ.96.98-ஆகவும், டீசல் விலை ரூ.88.20-லிருந்து ரூ.87.96-ஆகவும் குறைந்துள்ளது. தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.90.56-ஆகவும், டீசல் 80.87-ஆகக் குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றம் உள்ளூா் வரிகளுக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த 24-ஆம் தேதியும், அதைத் தொடா்ந்து 25-ஆம் தேதியும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.
இதனிடையே, உலகின் மிகப்பெரிய வா்த்தக வழித்தடமான சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கி, சுமாா் ஒரு வார காலம் போக்குவரத்து தடைபட்டதால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. போக்குவரத்து சீரானதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. மூன்று முறைக்கும் சோ்த்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 61 காசுகளும், டீசல் விலை 60 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.