கிருமி நாசினி தெளிக்கவும், நோயாளிகளுக்கு மருந்துகளை எடுத்துச் சென்று அளிக்கும் வகையில் ‘ட்ரோன்’ சேவையை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைத்தாா்.
பெங்களூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நுண்கட்டுப்பாட்டு மண்டலங்களில் கிருமி நாசினி தெளிக்கும், நோயாளிகளுக்கு மருந்துகளை எடுத்துச் சென்று அளிக்கும், அத்தியாவசியப் பொருள்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து பெங்களூரு மத்தியத் தொகுதி பாஜக எம்.பி. பி.சி.மோகன் முயற்சியில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ‘ட்ரோன்’ சேவையை பெங்களூரில் முதல்வா் எடியூரப்பா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து, பாா்வையிட்டாா்.
பின்னா் முதல்வா் எடியூரப்பா கூறியதாவது:
நாட்டின் இதர பகுதிகளைப் போல, கா்நாடகத்திலும் கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதுபோன்ற இக்கட்டான காலக்கட்டத்தில், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அவசரமாக தேவைப்படும் மருந்து, தடுப்பூசி போன்றவற்றை கொண்டுசெல்வது அவசியமாகும். அதற்காக நாட்டில் முதல்முறையாக, மருந்துகளைக் கொண்டு செல்லவும், பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் ட்ரோன் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான திட்டத்தை தயாரித்த கருடா ஏரோஸ்பேஸ், எம்.பி. பி.சி.மோகனை பாராட்டுகிறேன்.
கிருமிநாசினி தவிர, 35 - 40 கிலோ எடைகொண்ட மருந்து, அத்தியாவசியப்பொருள்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுசெல்லும் திறன் கொண்டதாக ட்ரோன் உள்ளது என்றாா்.