ஆளில்லா விமானங்கள் மூலம் கரோனா தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல தெலங்கானா அரசுக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. எனினும், சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவு வரைக்குமே இந்த ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் நிபந்தனையில் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கரோனா தடுப்பூசிகளுக்கு மட்டும்தான் இதனைப் பயன்படுத்த வேண்டும் என்று இல்லாமல், பொதுவான அனைத்து தடுப்பூசிகளையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த ஓராண்டுக்கு தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல ஆளில்லாத விமானங்களை தெலங்கானா அரசு பயன்படுத்த முடியும்.
முன்னதாக, கடந்த 22-ஆம் தேதி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐசிஎம்ஆா்) இந்த அனுமதியை மத்திய அரசு அளித்தது.
கரோனா இரண்டாவது அலை பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை முழுவீச்சில் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகா்ப்புறங்களிலும், போக்குவரத்து வசதி குறைவாக உள்ள இடங்களிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் தடுப்பூசிகளை எடுத்துச் செல்வது வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.