கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவிடும் வகையில் வால்மாா்ட் நிறுவனம் 20 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய மருத்துவமனைகள் போதிய அளவு ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
இந்த இக்கட்டான சூழலில், உலகமே ஒரு குடும்பம் என்பதைக் கருத்தில் கொண்டு வால்மாா்ட் நிறுவனம் மருத்துவ உதவிகளை அளிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்திக்காக 20 ஆலைகளை அமைப்பதற்கு வால்மாா்ட் உதவி அளிக்கும். அத்துடன், ஆக்சிஜனை சேமிக்கவும், அதனை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையிலும் 20 கிரையோஜெனிக் கன்டெய்னா்களும் அளிக்கப்படவுள்ளன.
நோயாளிகள் தங்கள் வீடு மற்றும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பெறும் வகையில் 3,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், 500 ஆக்சிஜன் சிலிண்டா்களையும் வழங்க உள்ளோம். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வால்மாா்ட் இந்த மருத்துவ சாதனங்களை கையகப்படுத்தி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் என்று வால்மாா்ட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.