ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு தொடர்ந்து பொய்யுரைத்து வருகிறது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. போதிய சிகிச்சை முறைகள் இல்லாததால் பல்வேறு பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்,
நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்ற பொய்யை அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. நம் அருகில் உள்ளவர்கள் அல்லது அன்புக்குரியவர்கள் என ஆக்சிஜன் சிலிண்டரைத் தேடும் தினமும் நூற்றுக்கணக்கான மக்களின் உண்மையான வாழ்க்கைக் கதைகள் இங்கு உள்ளன.
எனக்கும் ஒரு கதை இருக்கிறது, என் நண்பர்களுக்கு பல கதைகள் உள்ளன.
காங்கிரஸ் இளைஞரணி மே 1 அன்று ஒரு உண்மையாக வாழ்க்கைக் கதையைக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு சகிப்புத்தன்மையற்ற அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவரது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பதிவுகளின் மூலமாக துஷ்பிரயோகம் செய்தார்.
அறிவார்ந்த அமைச்சர்கள் ஏன் இப்படி பக்தாள்களாக மாறுகின்றனர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, தில்லியில் உள்ள நியூசிலாந்து தூதரகம், ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டுமென்று காங்கிரஸிடம் உதவி கேட்டது. அதன்படி, காங்கிரஸ் இளைஞர் அணி தேசிய தலைவர் ஸ்ரீனிவாஸும், அவரது தலைமையிலான இளைஞர் அணியும் சிலிண்டர்களை கொண்டு சென்றனர். காங்கிரஸ் இளைஞர் அணி, நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து உதவி வருகிறது.