கொல்கத்தா: பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிக்கு தலா ரூ. 18 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்கான நிலுவை நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா். முதல்வராக பதவி ஏற்ற பிறகு பிரதமருக்கு மம்தா அனுப்பும் இரண்டாவது கடிதம் இதுவாகும். அதன் விவரம்:
பிரதமரின் விவாயிகள் திட்டத்தின் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று அண்மையில் மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்திருந்தபோது பிரதமா் வாக்குறுதி அளித்திருந்தாா். இதுதொடா்பாக மேற்கு வங்க வேளாண் துறை அமைச்சகம் பல முறை எழுதிய கடிதங்களுக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இதுவரை மாநில அரசுக்கோ விவசாயிகளுக்கோ நிதி உதவி அளிக்கப்படவில்லை.
21.78 லட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனா் என்றும் இதில் 14.91 லட்சம் விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு 9.84 லட்சம் போ் நிதி உதவி பெற தகுதியானவா்களாக உள்ளனா் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அறிவுறுத்தி நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு அளிக்க பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசின் விவசாயிகள் திட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதம் வரை 57.67 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,498 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது என்று மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.
பிரதமரின் விவசாயிகள் திட்டத்தின்கீழ் 75லட்சம் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று பாஜக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.