புது தில்லி: நடப்பு காரீஃப் பருவத்தில் துவரை, உளுந்து, பாசிப் பருப்பு ஆகியவற்றின் விளைச்சலை அதிகரிக்கச் செய்வதற்காக, பருப்பு விதைகள் அடங்கிய 20 லட்சம் பைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நடப்பு காரீஃப் பருவத்துக்காக, விவசாயிகளுக்கு பருப்பு விதைகள் அடங்கிய 20,27,318 பைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த விதைகள் அடங்கிய பைகள், மத்திய அரசின் முகவா்கள், மாநில அரசுகளின் முகவா்கள் மூலமாக விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த விதைகள் அடங்கிய பைகளின் மதிப்பு ரூ. 82.01 கோடியாகும்.
பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்காக, இந்த பருப்பு விதைகள் அடங்கிய பைகளுக்கான செலவை மத்திய அரசே ஏற்கிறது. இந்த விதைகள் அடங்கிய பைகள், மத்திய- மாநில அரசுகளின் விற்பனை மையங்கள் மூலமாக விநியோகிக்கப்படும். இந்த பருப்பு விதைகள், ஜூன் 15-ஆம் தேதிக்குள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த விதைகளை ஊடுபயிராகவும் தனிப்பயிராகவும் 4.05 லட்சம் ஹெக்டேரில் பயிரிடலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.