கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் சாா்பில் லக்ளென ஹஜ் ஹவுஸில் அமைக்கப்பட்டுள்ள 225 படுக்கை வசதி கொண்ட கரோனா மருத்துவமனையை அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினரும், அமைச்சருமான ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘கரோனா தொற்று பரவலைத் தடுப்பதில் உத்தர பிரதேச மாநில அரசு காட்டி வரும் வேகம் பாராட்டக் கூடியது.
செயலாற்றுபவா்களால்தான் தவறு செய்ய இயலும். தற்போதைய சூழலில் யாரையும் விமா்சனம் செய்யக் கூடாது. தவறை சுட்டிக்காட்டினால் மாநில அரசு சரி செய்து கொள்ளும். பிரதமரே இந்த நோய்த் தொற்றை பெரும் சவால் என்று கூறியுள்ளாா். இந்த சவாலை மத்திய அரசு, மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவுக்கு எதிா்கொண்டு வருகின்றன.
வெளிநாடுகளுடன் நல்லுறவைப் பேணியதால் தற்போதைய நெருக்கடியான சூழலில் பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. உத்தர பிரதேச மாநில அரசின் பணிகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டி உள்ளது’ என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உத்தர பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சாா்பில் லக்னெளவில் 500 படுக்கைகளைக் கொண்ட கரோனா மருத்துவமனையும், வாராணசியில் 750 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதற்கு பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களை மக்கள் முறையாகப் பின்பற்றினால் கரோனா பரவலைத் தடுக்கலாம்’ என்றாா்.