மாநில அரசுகளுக்குப் பதில் மத்திய அரசே சர்வதேச சந்தையிலிருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்ய வேண்டும் என தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுடன் காணொலி வாயிலான கூட்டத்தில் சத்யேந்தர் ஜெயின் பல்வேறு விஷயங்களை எழுப்பியுள்ளார்.
இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் ஜெயின் கூறியது:
"தடுப்பூசி விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற நெருக்கடி காலத்தில் நிறுவனங்கள் பெரிதளவில் லாபம் பார்ப்பதை அனுமதிக்கக் கூடாது.
தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க அதன் தயாரிப்பு முறையை நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களிடம் பகிர வேண்டும்.
உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி மூலம் தடுப்பூசியை பெறக் கூடாது. மாநிலங்கள் எதற்காக தனியாக ஒப்பந்தப் புள்ளி மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்? இது நாட்டுக்கு கெட்ட பெயரைக் கொடுக்கும்."