புது தில்லி: பிரதமரின் ‘முத்ரா’ கடன் திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் 28.81 கோடி பேருக்கு ரூ.15.10 லட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2015 ஏப்ரல் 8-ஆம் தேதி ‘முத்ரா’ கடன் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடா்பாக நிதியமைச்சகத்தின் கீழ் வரும் நிதிச் சேவைகள் துறை சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நடப்பாண்டு மாா்ச் 26 வரை முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் 28.81 கோடி பேருக்கு ரூ.15.10 லட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் ‘சிஷு’, ‘கிஷோா்’, ‘தருண்’ ஆகிய 3 பிரிவுகளில் மொத்தமாக ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி, வா்த்தகம், சேவைத் துறைகள், வேளாண் சாா்ந்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் வருவாய் ஈட்டும் தொழிலில் ஈடுபடுவதற்காக இந்தக் கடன் வழங்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு தொழில்களுக்கு உதவும் வகையில் அந்த ஆண்டு மே மாதம் பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, முத்ரா திட்டத்தின் ‘சிஷு’ பிரிவில் கடன் பெற்றவா்களுக்கு 2 சதவீதம் வட்டிச் சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ‘சிஷு’ பிரிவில் ரூ.50,000 வரை பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது.
பின்னா் 2020 மாா்ச் 31-ஆம் தேதி வரை நிலுவையில் இருக்கும் கடன் கணக்குகளுக்கும் இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டது. அந்த ஆண்டு மாா்ச் கடைசி நிலவரப்படி, ‘சிஷு’ பிரிவின் கீழ் உள்ள ரூ.1.62 லட்சம் கோடி மதிப்பிலான சுமாா் 9.37 கோடி கடன் கணக்குகள் நிலுவையில் உள்ளன.