திருவனந்தபுரம்: வரும் புதிய கல்வியாண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு முறையில் தொடங்கும் என்று கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
தற்போதிருக்கும் சூழ்நிலையில் யார் ஒருவரும் பள்ளிக்குச் சென்று பயிலுவது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது, கடந்த ஆண்டைப் போல பள்ளிச் செல்லாமல் ஆன்லைன் மூலமே கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டிலும் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி வகுப்புகள் அனைத்தும் அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடைபெறும். வகுப்புகளை ஆர்வத்துடன் கவனிக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை ஜூன் 1-ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார் என்று சிவன்குட்டி கூறியுள்ளார்.