தில்லியில் ரெம்டெசிவிர் ஊசியை அதிக விலைக்கு விற்றதாக தனியார் மருத்துவமனை செவிலியர்கள் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரோஹினியில் வசிக்கும் அவிச்சல் அரோரா(30), ஷாலிமார் பாக் நகரில் வசிக்கும் பிரதீப் பரத்வாஜ்(34) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவரிடமிருந்து எந்தவித மருந்து சீட்டும் இல்லாமல் ரெம்டெசிவிர் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பரத்வாஜிடமிருந்து வைரஸ் தடுப்பு மருந்தினை பாயல் சவுத்ரி மூலம் ரூ.30,000-க்கு வாங்கியதாகவும், அவற்றை ரூ.40,000-க்கு விற்றதாகவும் அரோரா தெரிவித்தார். பர்த்வாஜ் ஷாலிமார் பாக் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டார். மேலும் ஆறு ஊசிகள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டன என்று துணை காவல் ஆணையர் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார்.
பரத்வாஜ் மற்றும் சவுத்ரி ஷாலிமார் பாக் தனியார் மருத்துவமனையின் கரோனா வார்டில் செவிலியராக உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஷாபாத்பால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.