லக்னௌ: சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அஸம் கான் கரோனா பாதித்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னௌவில் உள்ள மேதாந்தா மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, அஸம் கானின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதித்த நிலையில், சிதாப்பூர் சிறையிலிருந்து மே 9-ஆம் தேதி லக்னௌவில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது மகன் அப்துல்லா கானும் கரோனா பாதித்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருவருக்கும் ஏப்ரல் 30-ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அஸம் கானும், அவரது மகனும் பல்வேறு வழக்குகளின் கீழ் கடந்த ஆண்டு முதல் சிதாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.