நாட்டின் நம்பிக்கைக்குரிய பிரதமர்களில் இந்திரா காந்தியின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
'இந்தியாவின் இரும்புப் பெண்மணி' முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று(நவ.19) கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தில்லியில் சக்தி ஸ்தலாவில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து நாடாளுமன்றத்திலும் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் உள்ள இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இதனிடையே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திரா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
'நாட்டின் நம்பிக்கைக்குரிய பிரதமர்களில் இந்திரா காந்தியின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் வாழ்ந்து அவர்களின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதே அவரது மிகப்பெரிய சக்தியாக இருந்தது.
பாட்டி, உங்கள் தைரியம் எப்போதும் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. நான் இன்னும் என்னிடம் உங்களைக் காண்கிறேன்.
உங்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.