தில்லியில் நவம்பர் 29-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் பேசியது:
"அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மட்டும் நவம்பர் 27 முதல் தில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும். மற்ற எரிபொருள்கள் மூலம் இயங்கும் வாகனங்கள் தில்லிக்குள் நுழைவதற்கானத் தடை டிசம்பர் 3 வரை அமலில் இருக்கும்.
இதையும் படிக்க | பெகாஸஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆப்பிள்
கடந்த 3 நாள்களில் காற்றின் தரம் கூடியுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள்களில் இருந்த அளவுக்கு காற்றின் தரம் உள்ளது.
நாங்கள் தனியாரிடமிருந்து இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளை வாடகைக்கு எடுத்துள்ளோம். அதை அரசு ஊழியர்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்."
சுற்றுச்சூழல் மாசு காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் மூட தில்லி அரசு கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டது. கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.