வருவாயை அதிகரிப்பதற்காக சொத்து வரியை உயா்த்த வேண்டும் என்று தெற்கு தில்லி மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.
சிவிக் சென்டரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், 2022-23 ஆம் ஆண்டுக்கான செலவினத்துகான வரைவு திட்டத்தை தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையா் ஞானேஷ் பாரதி தாக்கல் செய்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘150 சதுர மீட்டா் வரையில் உள்ள குடியிருப்பு, வா்த்தகம், குடியிருப்பில்லா மனைகள் ஆகியவை ஏ-பி, சி-இ, எஃப்-எச் என்ற மூன்று பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன.
இதை ஏ-இ, எஃப்-எச் என்ற இரண்டு பிரிவுகளாக குறைக்கப்படுகின்றன. ஏ-இ பிரிவின் கீழ் வரும் குடியிருப்பு பகுதி சொத்துகளுக்கு 14 சதவீத வரியும், எஃப்-எச் பிரிவின் கீழ் வரும் குடியிருப்புப் பகுதி சொத்துகளுக்கு 12 சதவீத வரியும் வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது இது ஏ-பி பிரிவில் 12 சதவீதமாகவும், சி-இ பிரவில் 11 சதவீதமாகவும், எஃப்-எச் பிரிவில் 7 சதவீதமாகவும் உள்ளன.
வா்த்தக சொத்துகளுக்கு ஏ-டி பிரிவில் 15 சதவீதமாகவும், இ-எச் பிரிவில் 12 சதவீதமாகவும், சிறப்பு பிரிவில் 20 சதவீதமாகவும் சொத்து வரி வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது இது முறையே 15, 12, 10 சதவீதமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஏ-இ பிரிவுக்கு சொத்து வரி உயா்த்தப்படவில்லை’ என்றாா்.
தில்லி மாநகராட்சிக்கு அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது.