சீக்கியர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த கங்கனாவுக்கு தில்லி சட்டப்பேரவை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா தலைமையிலான அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவுக்கு முன்பு கங்கனா டிசம்பர் 6ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீக்கியர்களை இழிவுப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட கங்கனவுக்கு எதிராக மும்பையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த வணிகர், தில்லி சீச்சிய குருத்வாரா நிர்வாக குழு தலைவர்கள் ஆகியோர் கங்கனாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். புதிய வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தை காலிஸ்தானி இயக்கம் நடத்திய போராட்டம் என கங்கனா கூறியுள்ளார்.
இதை, அவர் உள்நோக்கத்துடனும் வேண்டுமென்றேயும் செய்துள்ளார் என அகாலி தள கட்சி குற்றம்சாட்டியுள்ளது. முன்னதாக, சர்ச்சை கருத்துகளை தெரிவித்த கங்கனாவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
இதன் காரணமாக, கங்கனா, இன்ஸ்டாகிராம் மூலம் தனது கருத்துகளை தெரிவித்துவருகிறார். விவசாயிகளை ஜிகாதிகளாக ஒப்பிட்டு பேசிய அவர் தற்போது சீக்கியர்கள் குறித்து அவதூறு பரப்பினார்.
கங்கனா ரணாவத் வெளியிட்ட பதிவில், "காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசை தங்களுக்கு ஏற்றப்படி வளைக்கலாம். ஆனால் நாட்டின் ஒரே ஒரு பெண் பிரதமர் (இந்திரா) அவர்களைத் தனது காலணியில் போட்டு நசுக்கினார். அவர் (இந்திரா) இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுத்திருந்தாலும் தன் உயிரைப் பணயம் வைத்து அவர்களை (காலிஸ்தானி பயங்கரவாதிகளை) கொசுக்களைப் போல் நசுக்கினார்.
அவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றும் அவரது (இந்திரா) பெயரைக் கேட்டால் அவர்கள் நடுங்குகிறார்கள். அவரை போன்ற ஒரு நபர் தான் இப்போது தேவை" எனப் பதிவிட்டிருந்தார்.