லக்கிம்பூர் சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரை சந்திக்க ராகுல் காந்தி உத்தரப் பிரதேசம் சென்றிருந்தார். பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஆகியோர் அவருடன் உள்ளனர்.
அப்போது, லக்னெள விமான நிலையத்தில் பாதுகாப்பு அலுவலர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சொந்த காரில் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியை சுற்றி பாதுகாப்பு அலுவலர்கள் குவிந்தனர்.
அப்போது, "எனக்கு வாகனம் ஏற்பாடு செய்து தர நீங்கள் யார்? என்னுடைய சொந்த காரில் தான் செல்வேன்" என பாதுகாப்பு அலுவலர்களிடம் தெரிவித்தார். விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல தடுக்கப்பட்ட நிலையில், அங்கேயே போராட்டத்தில் குதித்தார்.
பின்னர், அங்கு குவிந்த செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய அவர், "அவர்கள் என்னை விமான நிலையத்தை விட்டு வெளியேற விடவில்லை. இதைப் பாருங்கள் - இது என்ன வகையான அனுமதி? உத்தரப் பிரதேச அரசு வழங்கிய அனுமதியின் நிலையை கெஞ்சம் பாருங்கள். நான் விமான நிலையத்தை விட்டு வெளியேற விரும்புகிறேன் ஆனால் அவர்கள் என்னை வெளியேற அனுமதிக்கவில்லை. இங்கு என்ன நடக்கிறது என்பதை சரியாக காட்டுங்கள்" என்றார்.
லக்கிம்பூர் சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கும் உத்தரப் பிரதேச அரசு அனுமதி வழங்கியது.