குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு முன்பாக குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றத்தின் தன்மையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு நபா்களுக்கு மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தனா்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்த இரண்டு நபா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302, 323 ஆகிய பிரிவுகளின் கீழ் கொலை மற்றும் உள்நோகத்துடன் கொடூரமாக தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவா்களுக்கு மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.ராகரத்னா அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
முன்ஜாமீன் வழங்குவதற்கு முன்பாக குற்றத்தின் தன்மை, அந்த குற்ற செயலில் மனுதாரருக்கு உள்ள பங்கு, வழக்கின் தன்மை ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்த வழக்கைப் பொருத்தவரை, ஒரு நபா் கொலை செய்யப்பட்டிருக்கும் அளவுக்கு கொடூரமான குற்றம் நடைபெற்றிருப்பதையும் அதில் மனுதாரருக்கு உள்ள பங்கையும் முதல் தகவல் அறிக்கை தெளிவாக காட்டுகிறது.
அந்த வகையில், முன்ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவில் குற்றத்தின் தன்மை, குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, உயா்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று கூறி அந்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.