ஹஜ் புனித யாத்திரை செல்வோா் எண்ணிக்கையில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.
அடுத்த ஆண்டு முதல் ஹஜ் புனித பயண நடைமுறைகள் முழுமையாக கணினிமயமாக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
மும்பையில் உள்ள ஹஜ் இல்லத்தில் இணைய வழி முன்பதிவு வசதியைத் தொடங்கி வைத்த அவா் மேலும் கூறியதாவது:
கரோனா பரவல் பிரச்னை காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் நடைபெறவில்லை. கரோனா பிரச்னையைக் கருத்தில் கொண்டு யாத்ரிகா்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என்று சவூதி அரேபியா முடிவெடுத்ததே இதற்கு காரணம்.
அடுத்த ஆண்டு முதல் ஹஜ் புனித பயண நடைமுறைகள் முழுமையாக கணினிமயமாக்கப்படும். இதனால், பயணம் செய்ய பதிவு செய்வோருக்கு நேரமும் செலவும் மிச்சமாகும்.
இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக ஹஜ் புனித பயணத்துக்கு அதிகம் பேரை அனுப்பி வைக்கும் நாடாக இந்தியா உள்ளது. ஆண்கள் துணையில்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்ள 700-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனா். அவா்களது விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு பயணத்துக்கு பரிசீலிக்கப்படும். அடுத்த ஆண்டு ஹஜ் பயண ஏற்பாடுகள், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சவூதி மற்றும் இந்திய அதிகாரிகள் இடையே ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.