புது தில்லி: தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, போக்குவரத்து சந்திப்புகளில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்ததும், வாகனங்களை நிறுத்தும் திட்டம் அக்டோபர் 18 முதல் மீண்டும் தொடங்கும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, சிவப்பு விளக்கு ஒளிர்ந்ததும் வாகனங்களை அணைத்துவைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இந்த திட்டம் அக்டோபர் 18 முதல் மீண்டும் தொடங்கவிருக்கிறது. சிவப்பு விளக்கு ஒளிர்ந்து வாகனங்களை நிறுத்தியதும், இஞ்சினை அணைத்துவைக்க வேண்டும். அனைவரும் இன்று முதல் கூட இதனைத் தொடக்கலாம். ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 18 முதல் தொடங்கவிருக்கிறது என்று கேஜரிவால் அறிவித்துள்ளார்.
தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், பொதுமக்கள் வாரத்தில் ஒரு நாளாவது தங்களது சொந்த வாகனத்தை எடுக்காமல், தில்லி மெட்ரோ, பேருந்து அல்லது இதர வாகனங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு செல்லலாம் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.