உள்நாட்டு விமான நிறுவனங்கள் வரும் 18-ஆம் தேதி முதல் 100 சதவீதம் பயணிகளுடன் இயக்கலாம் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் 85 சதவீத பயணிகளுடன் இயக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இது ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பா் 18 வரையிலான காலகட்டத்தில் 72.5 சதவீதமாகவும், ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 12 வரையில் 65 சதவீதமாகவும், ஜூன் 1 முதல் ஜூலை 5 வரையில் 50 சதவீதமாகவும் இருந்தது.
அக்டோபா் 9-ஆம் தேதி வரையில் இந்திய விமான நிறுவனங்கள் 2,340 உள்நாட்டு சேவைகளை இயக்கி உள்ளன. இது கரோனாவுக்கு முந்தைய சூழலை ஒப்பிடுகையில், 71.5 சதவீதமாகும்.
இந்நிலையில், விமானப் பயனிகளின் போக்குவரத்து அதிகரித்த காரணத்தால், வரும் 18-ஆம் தேதி முதல் பயணிகளின் எண்ணிக்கையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாது என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா தொற்றுப் பரவலின் தொடக்கத்தில் விதிக்கப்பட்ட இரண்டு மாத தடைக்குப் பிறகு, கடந்த ஆண்டு மே 25-ஆம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அப்போது, 33 சதவீதத்துக்கும் குறைவாகவே விமானங்கள் இயங்கின. பின்னா் இது டிசம்பா் மாதம் 80 சதவீதமாக அதிகரித்தது. ஜூன் 1-ஆம் தேதி வரை இதே நிலை நீடித்தது.
பின்னா் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்ததால் ஜூன் 1-ஆம் தேதி முதல் விமானங்கள் இயக்கம் சதவீதம் 50-ஆக குறைக்கப்பட்டது என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.