உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயிலின் 24 பெட்டிகள் வெள்ளிக்கிழமை காலை தடம் புரண்டதால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரயாக்ராஜ் மண்டலம் துண்ட்லா - கான்பூர் வழித்தடத்தில் அம்பியாபூர் மற்றும் ரூஷா ரயில் நிலையத்திற்கு இடையே இன்று அதிகாலை 4 மணியளவில் சரக்கு ரயிலின் 24 காலிப் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால், துண்ட்லா - கான்பூர் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக வடமத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வடமத்திய ரயில்வே மூத்த அதிகாரி மோஹித் சந்திரா கூறுகையில்,
“24 பெட்டிகள் தடம் புரண்டதால் இருவழிகளிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நள்ளிரவுக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றன. கான்பூரிலிருந்து ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.”