ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள ராணுவ நிலைக்கு அருகே சனிக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ராணுவ அதிகாரியும் ராணுவ வீரரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:
எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக, எல்லையோரப் பகுதியில் ராணுவத்தினா் சனிக்கிழமை காலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
நௌஷேரா செக்டாரில் உள்ள கலால் பகுதியில் அவா்கள் சென்றுகொண்டிருந்தபோது, குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதில், ராணுவ வீரரும் ராணுவ அதிகாரியும் பலத்த காயமடைந்தனா். இருவரும் உடனடியாக அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவா்கள் உயிரிழந்தனா்.
அந்தப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க ராணுவத்தினா் சாலையோரம் கண்ணிவெடிகளைப் புதைத்து வைப்பது வழக்கம். இந்த குண்டு வெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்று உடனடியாகத் தெரியவில்லை என்றாா் அவா்.