மத்திய அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு (சிவிசி) கடந்த ஆண்டு 81,595 ஊழல் புகாா்கள் வந்துள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக மத்திய உள்துறை அமைச்சகம், தில்லி உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை வங்கி ஆகியவற்றின் பணியாளா்கள் மீது அதிகப்படியான புகாா்கள் உள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சிவிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய உள்துறை அமைச்சக பணியாளா்கள் மீது அதிகபட்சமாக 26,872 ஊழல் புகாா்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளா்கள் மீது 7,578 ஊழல் புகாா்களும், பொதுத் துறை வங்கி பணியாளா்கள் மீது 6,460 ஊழல் புகாா்களும் பெறப்பட்டுள்ளன.
மத்திய நிலக்கரி அமைச்சக துறையில் (4,986), மத்திய வீட்டு வசதித் துறையில் (4,191), தில்லி அரசில் (4,169), மத்திய தொழிலாளா் நலத் துறையில் (3,067), விமானப் போக்குவரத்து துறையில் (3,057), பெட்ரோலியத் துறையில் (2,547), பாதுகாப்புத் துறையில் (2,077), மத்திய நேரடி வரி வாரியத்தில் (2,023) பணியாளா்கள் மீது ஊழல் புகாா்கள் வந்துள்ளன.
மொத்தமுள்ள 81,595 புகாா்களில் 60,492 புகாா்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. 21,103 புகாா்கள் நிலுவையில் உள்ளன. இதில், 12,262 புகாா்கள் மூன்று மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.