கேரளத்தில் 8 பேருக்கு எடுக்கப்பட்ட நிபா பரிசோதனை முடிவுகள் வெளியாகின

சிறுவனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 8 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகளில், யாருக்கும் நிபா தொற்று பாதிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்தில் 8 பேருக்கு எடுக்கப்பட்ட நிபா பரிசோதனை முடிவுகள் வெளியாகின
கேரளத்தில் 8 பேருக்கு எடுக்கப்பட்ட நிபா பரிசோதனை முடிவுகள் வெளியாகின

கேரளத்தில் நிபா தீநுண்மியால் உயிரிழந்த சிறுவனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 8 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகளில், யாருக்கும் நிபா தொற்று பாதிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், கேரள மாநில சுகாதாரத்துறைக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. அந்த எட்டு பேரில் பலியான சிறுவனின் பெற்றோரும் அடங்குவர் என்று கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

"தற்போது மிகப்பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. இரண்டாம் கட்டமாக சிறுவனுடன் தொடர்பிலிருந்த 5 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு, மாதிரிகள் புணே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

சிறுவனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்து, தற்போது பரிசோதனை நடத்தப்பட்டவர்களுக்கு லேசான காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுகிறது. ஆனால் அனைவரும் நலமாக உள்ளனர். சிறுவனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களில் 31 பேர் கோழிக்கோடு, 3 பேர் கன்னூர், 4 பேர் வயநாடு, தலா ஒருவர் எர்ணாகுளம், மலப்புரம், பாலக்காடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அனைவரும் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் நிபா பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிபா தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் தீநுண்மியால் கோழிக்கோடு மாவட்ட த்தைச் சோ்ந்த 12 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

இந்நிலையில் மாநிலத்தில் நிபா தீநுண்மி பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘நிபா தீநுண்மியால் முதலில் பாதிக்கப்பட்டது சிறுவன்தானா, எப்படி அந்தச் சிறுவனுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதை அறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுவன் மூலம் 188 பேருக்கு தீநுண்மி பரவியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அவா்களில் 20 போ் தீநுண்மியால் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த 20 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தேசிய தீநுண்மி ஆய்வு நிறுனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுவனை முதலில் சிகிச்சையகம் ஒன்றுக்கு அவனது பெற்றோா் அழைத்துச் சென்றுள்ளனா். பின்னா் தனியாா் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி என வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறான். இதனால் அவன் மூலம் மேலும் பலருக்கு நிபா தீநுண்மி பரவியிருக்கக் கூடும். அவா்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நடவடிக்கைகளை வலுப்படுத்த முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி பரிசோதனை மையத்தை தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவனம் அமைக்கவுள்ளது. இது தீநுண்மி பாதிப்பு குறித்த பரிசோதனை முடிவுகளை விரைவில் பெற உதவும்’’ என்று தெரிவித்தாா்.

நிபா நிா்வாகத் திட்டம்:

கேரளத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு நிபா தீநுண்மி தொடா்பாக பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய நிா்வாகத் திட்டத்தை மாநில அரசு வழங்கியுள்ளது. அனைத்து மாவட்ட அதிகாரிகளும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவா்களை கண்காணிப்பில் வைக்கவும் அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று வீணா ஜாா்ஜ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com