குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பாஜக சட்டப்பேரவை குழு தலைவராக அவரை சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேலிடம் அரசியல் கற்ற இவர், தற்போது காட்லோடியா தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்துவருகிறார்.
குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் பொறுப்பிலிருந்து நேற்று விஜய் ரூபானி விலகினார். கரோனா இரண்டாம் அலையை கையாண்ட விதம், அரசை நிர்வகிக்கும் முறை மத்திய தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவந்தது. இருப்பினும், இது மூத்த அமைச்சர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஏழு மாதங்களில், பாஜகவின் நான்கு முதல்வர்கள் பதவி விலிகியுள்ளனர். ஜூலை மாதம், கர்நாடக முதல்வர் பொறுப்பிலிருந்து எடியூரப்பா விலகினார். முன்னதாக, உத்தரகண்ட் முதல்வராக நான்கு மாதங்கள் பொறுப்பு வகித்த தீரத் சிங் ராவத் அப்பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர், புஷ்கர் சிங் தாமிக்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அதேபோல், 2016ஆம் ஆண்டு, சட்டப்பேரவை தேர்தலுக்கு 16 மாதங்களுக்கு முன்பு, குஜராத் முதல்வர் பொறுப்பு விஜய் ரூபானிக்கு வழங்கப்பட்டது.