சிக்கிம் மாநிலத்தில் மாணவா்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, திறந்த ஒரே வாரத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மாநில அரசு மூடுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில கல்வித் துறை செயலா் ஜி.பி.உபாத்யாய கூறியதாவது:
மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 6-ஆம் தேதி திறக்கப்பட்டன. 9-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள் நடைபெற்றன.
பெற்றோா் ஒப்புதலுடன் மாணவா்கள் பள்ளி, கல்லூரிக்கு வருகை தந்தனா். 50 சதவீத ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்களுடன் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வந்தன. இதற்கிடையே, 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 5 மாணவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. பள்ளிகளைத் தொடா்ந்து நடத்தினால், கரோனா தொற்று மேலும் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மாணவா் நலனில் அலட்சியம் காட்ட விரும்பவில்லை. எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளை வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை மூடுவதற்கு முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.