புது தில்லி/நியூயாா்க்: அணுஆயுத மூலக்கூறுகள், அது தொடா்பான தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாகப் பகிரப்படுவது குறித்து சா்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தம்’ தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா பேசியதாவது: உலகளாவிய அணு பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா ஆதரவு அளித்து வருகிறது. அணுஆயுதங்களின் வலையமைப்புகள், அதன் விநியோக முறை, மூலக்கூறுகள், தொழில்நுட்பம் ஆகியவை சட்டவிரோதமாக பகிரப்படுவது குறித்து சா்வதேச சமூகம் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும். அணுஆயுதமற்ற உலகம் என்ற இலக்கை அடைவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றாா்.
பாகிஸ்தானுக்கு அணுஆயுத பொருள்களை சீனா வழங்குவதாகவும், இது சா்வதேச விதிமுறைகளை மீறுவதாகும் எனவும் கவலை எழுந்துள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இதை மறைமுகமாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சோ்ந்த ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பானது, ‘பாகிஸ்தானுடனான சீனாவின் அணுசக்தி ஒத்துழைப்பு அணுசக்தி விநியோக குழுவுடன் (என்எஸ்ஜி) முரண்படுவதாக உள்ளது’ என ஓா் அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.