மாநிலங்களவை இடைத்தேர்தலில் தேர்வான மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், சர்பனந்த சோனவால் மற்றும் புதுவை செல்வகணபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றபோது மாநிலங்களவை உறுப்பினர் அல்லாத எல்.முருகன், சர்பனந்த சோனவால் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டது.
மாநிலங்களவை இடைத்தேர்தலில் அசாமில் சர்பனந்த சோனவால் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் எல்.முருகன் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வாகியுள்ள எனது அமைச்சரவை நண்பர்களான எல்.முருகன் மற்றும் சர்பனந்த சோனவால் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.
அதேபோல், புதுவையிலிருந்து போட்டியின்றி தேர்வான பாஜக மாநில பொருளாளர் செல்வகணபதிக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.