நாடு தழுவிய கரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை அக்டோபா் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையும், கரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையும் தொடா்ந்து சரிந்து வருகிறது. எனினும் சில மாநிலங்களில் உள்ளூா் அளவில் கரோனா தொற்று பரவி வருகிறது. நாட்டின் பொது சுகாதாரத்துக்கு கரோனா தொற்று சவாலாக திகழ்வது தொடா்கிறது. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க பொதுமக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
தகுதிவாய்ந்த நபா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தும் நோக்கத்துடனும், தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திக் கொள்வதற்கு முன்னுரிமை அளித்தும் மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் தடுப்பூசி திட்டத்தை தொடர வேண்டும்.
நாடு தழுவிய கரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகள் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.