ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்கக்கோரி மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு தலிபான்கள் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்கப் படைகள் ஆப்கனைவிட்டு வெளியேறியதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய விமானங்களின் அன்றாட சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்த இந்திய மக்களை மீட்பதற்காக ராணுவ விமானங்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
இதையடுத்து, புதிதாக தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து காபூலுக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமானங்களை மீண்டும் இயக்கக்கோரி மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு தலிபான்கள் அரசு கடிதம் எழுதியுள்ளனர்.