பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு பதிலாக என்னை தவறாக டிவிட்டரில் டேக் செய்கிறீர்கள் என இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், அமரீந்தர் சிங்கை பற்றிய கருத்துகளை டிவிட்டர் மூலம் தெரிவிப்பவர்கள் அவரை டேக் செய்யாமல், இந்திய கால்பந்து விளையாட்டு வீரரான அம்ரீந்தர் சிங்கை டேக் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சுட்டுரை வெளியிட்டுள்ள கால்பந்து வீரர், “அன்பிற்குரிய பத்திரிகை நண்பர்களே நான் அம்ரீந்தர் சிங். இந்திய கால்பந்து அணியின் கோல் கீப்பராக உள்ளேன். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அல்ல. தயவுசெய்து என்னை டேக் செய்வதை நிறுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இவரது சுட்டுரையை மேற்கோள்காட்டி பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியது, “உங்களுடைய வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களின் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.