புது தில்லி: விலை குறைவான சீன ஆப்பிள்கள் இந்தியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற தகவலை மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் மறுத்துள்ளாா். மேலும், சீன இறக்குமதி ஆப்பிள்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்துவிட்டதாகக் கூறுவது வதந்தி என்றும் அவா் தெரிவித்தாா்.
தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த கோயல் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு மத்திய அரசு வரியைக் குறைத்துள்ளதாக சிலா் வதந்திகளைப் பரப்புகின்றனா். இது எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாத தகவல். இதுபோன்ற எந்த வரிக் குறைப்பு நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) விதிகளின்படிதான் அனைத்து இறக்குமதி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா்.
சீனாவில் தொடா்ந்து ஏற்படும் மின்தடையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவுமா என்ற கேள்விக்கு, ‘நமது உள்நாட்டு நிறுவனங்களுக்கு இப்போது அதிக வாய்ப்புகள் உள்ளன. தொழில்முனைவோா் மிகுந்த நாடாக இந்தியா மாறி வருகிறது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நமது நாட்டில் அதிகம் உள்ளன. நாட்டின் ஏற்றுமதி தொடா்ந்து அதிகரித்து வருகிறது’ என்றாா்.