பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியுடன் இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு செல்லவுள்ளதாக மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சித்து வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
“பஞ்சாப் முதலமைச்சர் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பானது இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும்.”
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதன்பிறகு சித்து ஆதரவாளரான சரண்ஜீத் சிங் சன்னி முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், அமைச்சரவையில் சித்துவின் விருப்பத்திற்கு மாறாக சிலர் இடம்பெற்றிருந்ததால் தனது தலைவர் பதவியை கடந்த செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
இதையும் படிக்க | தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அமரீந்தர் சந்திப்பு
பின்பு காணொலி வெளியிட்ட சித்து, மணல் குவாரி ஒப்பந்த ஏலங்களில் முறைகேடு செய்ததாக, அமரீந்தா் சிங் அமைச்சரவையில் இருந்து பதவி விலகியவருக்கு மீண்டும் அமைச்சா் பொறுப்பு வழங்கபட்டது மற்றும் சில அதிகாரிகளின் பணி நியமனம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கிடையே நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சித்துவுடனான பிரச்னைகள் பேசி தீர்க்கப்படும் என முதல்வர் சரண்ஜீத் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.