கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2022-ஆம் நிதியாண்டில் 4.4 சதவீதம் உயா்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது:
இரண்டு ஆண்டுகள் மந்த நிலைக்குப் பிறகு தற்போது நிறுவனத்தின் செயல்பாட்டில் எழுச்சி காணப்பட்டுள்ளது. அந்த வகையில், அண்மையில் முடிவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் கோல் இந்தியா 62.26 கோடி டன் நிலக்கரி உற்பத்தியை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதம் அதிகம்.
மேலும், நிலக்கரி விநியோகமும் கணிசமான வகையில் 15.3 சதவீதம் அதிகரித்து 66.19 கோடி டன்னைத் தொட்டுள்ளது. அளவின் அடிப்படையில் இது,முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் விற்பனையான 57.45 கோடி டன்னைக் காட்டிலும் 8.74 கோடி டன் அதிகம்.
மேலும், மின் துறைக்கான நிலக்கரி ஒதுக்கீடு கடந்த நிதியாண்டில் சாதனை அளவாக 54.04 கோடி டன்னாக இருந்தது என கோல் இந்தியா தெரிவித்துள்ளது.