ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை தில்லியில் அவருடைய இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
சந்திப்புக்குப் பிறகு மெஹபூபா முஃப்தி கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி நாட்டை பல காலங்கள் பாதுகாப்பாக வைத்திருந்தது. ஆனால், பாஜக அதிக பாகிஸ்தான்களை உருவாக்க விரும்புகிறது’ என்றாா்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் பாஜக ஆதரவுடன் முஃப்தி ஜம்மு-காஷ்மீரின் முதல்வரானாா். ஆனால், இரு கட்சிகளும் பின்னா் கூட்டணியை விலக்கிக் கொண்டதால் கூட்டணி அரசு முழுமையான ஆட்சி காலத்தை நிறைவு செய்ய முடியாமல் போனது.